9.029 சேந்தனார் - கோயில் (கோயில் (சிதம்பரம்) ) |
Back to Top
சேந்தனார் திருப்பல்லாண்டு
9.029  
சேந்தனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=6hE5FaTnKMk
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
| [1] |
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்புகுந் தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
| [2] |
நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந் திறங்களு மேசிந்தித் தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக் காலநிழற் பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
| [3] |
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
| [4] |
புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய் இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக் கென்செய வல்லம்என்றும் கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
| [5] |
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்குந் திசைதிசையன கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
| [6] |
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற தார்பெறு வார்உலகில் ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
| [7] |
சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா நெறிதந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
| [8] |
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
| [9] |
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனக மும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
| [10] |
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
| [11] |
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
| [12] |
எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு தாம்மெம் பிரான்என் றென்று சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் செப்புரை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேற் பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று பல்லாண்டு கூறுதுமே.
| [13] |